
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட உள்ளது. இதனால் எந்தெந்தந்த வீரர்கள் தக்கவைக்கப்படுவார்கள், வீரர்கள் ஏலத்தில் யாரை வாங்க அணிகள் ஆர்வம் காட்டும் என்ற விவாதங்கள் தொடங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் அடுத்த சீசனில் விளையாடுவாரா என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன.
ஏனெனில் தற்சமயம் 41 வயதை எட்டியுள்ள அவர் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடருடனே ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த ஐபிஎல் தொடரிலும் அவர் சிஎஸ்கேவிற்காக விளையாடுவார் என்ற தகவல்கள் வெளியாகின. இதனால் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் எம்எஸ் தோனி விளையாடுவாரா என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்காமல் தான் உள்ளது.
இந்நிலையில், ஐபிஎல் அணி உரிமையாளர்கள் மற்றும் பிசிசிஐ நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒவ்வொரு அணியும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தங்கள் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை தக்கவைப்பதற்காக, ஐபிஎல் விதிகளில் சில மாற்றங்களை செய்ய வேண்டி பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.