சாம்பியன்ஸ் கோப்பை 2025: நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா!
நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரி வெற்றியைப் பதிவுசெய்ததுடன், சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது.

பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.
இந்நிலையில் இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இவ்விரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சான்ட்னர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு வில் யங் மற்றும் ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் முதல் விக்கெட்டிற்கு 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், வில் யங் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Trending
அவரைத்தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரச்சின் ரவீந்திரா 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 37 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் குல்தீப் யாதவின் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து அணியின் அனுபவ வீரர் கேன் வில்லியம்சனும் குல்தீப் யாதவின் இரண்டாவது ஓவரிலேயெ ஆட்டமிழந்து நடையைக் கட்டினார். இதனால் அந்த அணி 75 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த டேரில் மிட்செல் - டாம் லேதம் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.
இதில் லேதம் 14 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கிளென் பிலீப்ஸும் தனது பங்கிற்கு 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 34 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார். இதற்கிடையில் நிதானமாக விளையாடி வந்த டேரில் மிட்செல் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்த நிலையில், 3 பவுண்டரிகளுடன் 61 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் இறுதியில் மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் கேப்டன் மிட்செல் சான்ட்னர் இணை சிறப்பாக செயல்பட்டதுடன் தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் விளாசி ஸ்கோரை உயர்த்தினர்.
இறுதியில் மிட்செல் சான்ட்னர் 8 ரன்களில் ரன் அவுட்டாகிட, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியை மைக்கேல் பிரேஸ்வெல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 53 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்களைச் சேர்த்துள்ளது. இந்திய அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷுப்மன் கில் நிதானமாக விளையாடிய நிலையில் மறுபக்கம் ரோஹித் சர்மா அதிரடியானா ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்தார். இதன்மூலம் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 105 ரன்களை எட்டிய நிலையில் 31 ரன்களை எடுத்திருந்த ஷுப்மன் கில் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய விராட் கோலியும் ஒரு ரன்னுடன் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.
மேற்கொண்டு அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ரோஹித் சர்மாவும் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 76 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழக்க, இந்திய அணி 122 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் - அக்ஸர் படேல் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 48 ரன்களிலும், அக்ஸர் படேல் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 29 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.
Also Read: Funding To Save Test Cricket
பின்னர் இணைந்த கேஎல் ராகுல் - ஹர்திக் பாண்டியா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியை இலக்கை நோக்கியும் அழைத்துச் சென்றனர். இறுதியில் ஹர்திக் பாண்டியா 18 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேஎல் ராகுல் 34 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இந்திய அணி 49 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றும் சாதித்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now