
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள வங்கதேச மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு முதல் ஓவரே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் அனுபவ தொடக்க வீரர் சௌமியா சர்க்கார் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ, மெஹதி ஹசன் மிராஸ், முஷ்ஃபிக்கூர் ரஹிம் உள்ளிட்டோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 25 ரன்களுடன் தன்ஸித் ஹசனும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஜக்கர் அலி மற்றும் தாவ்ஹித் ஹிரிடோய் இணை அபாரமாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர்.
இதில் இருவரும் அரைசதம் கடந்து அசத்தியதுடன், 6ஆவது விக்கெட்டிற்கு 154 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் ஜக்கர் அலி 4 பவுண்டரிகளுடன் 64 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ரிஷாத் ஹொசைனும் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் தாவ்ஹித் ஹிரிடோய் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்திய கையோடு விக்கெட்டை இழந்தார் இதன்மூலம் வங்கதேச அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 228 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ரானா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.