
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இன்று, மும்பை வான்கடே மைதானத்தில், நடப்பு உலக சாம்பியன் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிக்கொண்ட போட்டி மிகவும் சுவாரசியமாக நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் அதிரடியாகக் குவித்தது. அந்த அணியின் ஹென்ரிச் கிளாசன் 67 பந்துகளில் 109 ரன்கள் குவித்தார்.
இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியால் 22 ஓவர்கள் மட்டுமே தாக்குப் பிடிக்க முடிந்தது. அவர்கள் 170 ரன்களுக்கு சுருண்டு 229 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை அடைந்தார்கள். தற்பொழுது இங்கிலாந்து அணி இந்த உலகக் கோப்பை தொடரில் நான்கு போட்டிகளில் விளையாடி நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்க அணிகளிடம் படுதோல்வி அடைந்திருக்கிறது. வங்கதேச அணிக்கு எதிராக மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது.
மேலும் தொடர்ச்சியாக பெற்ற மூன்று தோல்விகளும் மோசமான தோல்விகள் என்கின்ற காரணத்தினால் ரன் ரேட் பெரிய அளவில் பாதிப்படைந்து இருக்கிறது. இதற்கு அடுத்து வரக்கூடிய போட்டிகளில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இந்தியா போன்ற பெரிய அணிகளுக்கு எதிராக வெற்றி பெற வேண்டும். மேலும் ரன் ரேட்டையும் இங்கிலாந்து உயர்த்த வேண்டும். இதன் காரணமாக இங்கிலாந்து அரையிறுதி வாய்ப்பு ஏறத்தாழ முடிந்து விட்டிருக்கிறது என்று கூட சொல்லலாம்.