
ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடக்கிறது. 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் சூப்பர் லீக் போட்டிகள் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் 8 இடங்களை பிடித்த நியூசிலாந்து, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வங்காளதேசம், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன.
எஞ்சிய 2 அணிகள் எவை? என்பதை நிர்ணயிப்பதற்தான உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டி ஜிம்பாப்வேயில் இன்று தொடங்கியது. இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒரு ஆட்டத்தில் ஜிம்பாப்வே மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து நேபாள அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குஷால் புர்டெல் மற்றும் ஆசிப் ஷேக் ஆகியோர் களம் இறங்கினர். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர்கள் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 171 ரன்கள் சேர்த்த நிலையில் குஷால் புர்டெல் 99 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து குஷால் மல்லா களம் இறன்கினார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆசிப் ஷேக் 66 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து ரோஹித் பவுடல் களம் இறங்கினார்.