
சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளை பின்னுக்கு தள்ளி ரசிகர்களின் அபிமான வடிவமாக உருவெடுத்துள்ள டி20 போட்டிகளின் புதிய சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி 2024 உலகக் கோப்பை அடுத்த வருடம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் டாப் 10 அணிகள் மோதும் இந்த தொடரின் பெரும்பாலான போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 2010க்குப்பின் 13 வருடங்கள் கழித்து நடைபெற உள்ளது.
ஆனால் அமெரிக்காவில் முதல் முறையாக ஐசிசி உலக கோப்பை போட்டிகள் நடைபெறுவது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். குறிப்பாக அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் இந்த முக்கியமான முடிவை ஏற்கனவே எடுத்த ஐசிசி அதற்கான உரிமையையும் வழங்கியுள்ளது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஏற்கனவே நிறைய மைதானங்கள் இருக்கும் நிலையில் அமெரிக்காவில் இத்தொடரை வெற்றிகரமான நடத்துவதற்கான வேலைகளை ஐசிசி தொடங்கியுள்ளது.
அதாவது அமெரிக்காவில் பிரபலமான நியூயார்க், ஃபுளோரிடா மற்றும் டாலஸ் ஆகிய நகரங்களில் இந்த உலகக்கோப்பை போட்டிகளை நடத்துவதற்கு ஐசிசி திட்டமிட்டுள்ளது. அதில் எப்போதுமே அதிக எதிர்பார்ப்பு இருக்கக்கூடிய ஆசிய கண்டத்தின் பரம எதிரிகள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நியூயார்க் நகரில் நடைபெறும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.