
ஐசிசி தொடர்களை அதிகம் வெல்வதும், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய மரியாதை கொடுப்பதும், தரமான மைதானம் மற்றும் ஆடுகளங்களை உருவாக்கி சிறந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொடுப்பதும் என, ஆஸ்திரேலிய அணிக்கு மிகச் சிறந்த கிரிக்கெட் மரபு இருக்கிறது. அதே சமயத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணுகுமுறை என்பது மிகவும் ஆக்ரோஷமான ஒன்று. அது எதிரணி வீரர்களையும் ரசிகர்களையும் எப்பொழுதும் ரசிக்க வைக்காது.
ஆனால் தற்போது ஆஸ்திரேலியாவின் இந்த ஆக்ரோஷ அணுகுமுறை மாறி இருக்கிறது. இதற்கு காரணம் தற்போதைய கேப்டன் கம்மின்ஸ் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் அதற்கு முன்பாகவே 2018 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பந்தை சேதப்படுத்தி ஸ்மித், வார்னர், பான்கிராஃப்ட் மூவரும் ஒரு வருடம் சர்வதேச கிரிக்கெட் விளையாட தடை பெற்றார்கள்.
இந்த நிகழ்வு ஆஸ்திரேலியா கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய தலைக்குனிவை ஏற்படுத்தியது. இதற்கு அடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் ஆக்ரோஷமான அணுகுமுறை தளர்த்தப்பட்டது. அவர்கள் மற்ற அணிகளை போல ஆக்ரோஷத்தை பெரிய அளவில் வெளிப்படுத்தாமல் விளையாட ஆரம்பித்தார்கள். அதன்பின் ஆஸ்திரேலியா அணி மெல்ல மெல்ல இந்த பாதையில் சென்று இன்று கம்மின்ஸ் தலைமையில் வேறொரு முகத்தில் இருக்கிறது.