
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4ஆவது டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் தீபக் சஹார் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆனால் 5ஆவது டி20 போட்டியில் தீபக் சஹார் தேர்வு செய்யப்படவில்லை. இதுகுறித்து சூர்யகுமார் யாதவ் பேசுகையில், தீபக் சஹார் குடும்பத்தினரின் அவசர மருத்துவ சிகிச்சைக்காக வீட்டிற்கு திரும்பியுள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் தீபக் சஹார்ன் தந்தை மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தீபக் சஹரின் தந்தை லோகேந்திர சிங் சஹாருக்கு மூளை பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்பின் உடனடியாக குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர்.
அதன்பின் தீபக் சஹாருக்கு தகவல் கொடுத்த நிலையில், அவர் பெங்களூருவில் இருந்து விமானம் வாயிலாக டெல்லி சென்று, அங்கிருந்து காரிலேயே அலிகார் சென்றுள்ளார். தீபக் சஹாரின் தந்தைக்கு ஏற்கனவே இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பதால், இன்னும் ஐசியூவிலேயே வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.