
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இடை நிறுத்தப்பட்ட 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் எதிவரும் மே 17ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கவுள்ளது. இதில் மே 17ஆம் தேதி நடைபெறும் போட்டியில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
மேற்கொண்டு பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் தொழில் நுட்ப கோளாறு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டிருந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியானது மே 24ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருபக்கம் ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்க இருந்தாலும் வெளிநாட்டு வீரர்கள் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர்களில் சிலர் சர்வதேச போட்டிகளின் காரணமாக இத்தொடரிலிருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகிவுள்ளது.