Advertisement

இந்திய அணியில் இடம் பிடித்த அறிமுக வீரர்; யார் இந்த துருவ் ஜூரெல்?

இங்கிலாந்து அணிக்கெதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகான இந்திய அணியில் அறிமுக வீரர் துருவ் ஜூரெல் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan January 13, 2024 • 11:35 AM
இந்திய அணியில் இடம் பிடித்த அறிமுக வீரர்; யார் இந்த துருவ் ஜூரெல்?
இந்திய அணியில் இடம் பிடித்த அறிமுக வீரர்; யார் இந்த துருவ் ஜூரெல்? (Image Source: Google)
Advertisement

இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது. இந்த சுற்றுப்பயணத்திற்கான முழு டெஸ்ட் அணியையும் அறிவிக்காமல் முதல் 2 போட்டிகளுக்கான இந்திய வீரர்களின் பட்டியலை மட்டுமே வெளியிட்டது. அதில் ரோஹித் சர்மா தலைமையில் 16 வீரர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக இளம் வீரரான துருவ் ஜுரேல்க்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படி இந்திய டெஸ்ட் அணியில் முதல்முறையாக இவருக்கு வாய்ப்பு கொடுக்க என்ன காரணம்? இவர் யார்? என்ற தேடல் தற்போது அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. அந்த வகையில் தற்போது, 22 வயதாகும் துருவ் ஜுரேல் இந்திய அணிக்காக அண்டர் 19 போட்டிகளில் இருந்தே விளையாடி வருகிறார். அண்டர் 19 அணியின் துணை கேப்டனாக செயல்பட்ட அவர் அந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு மட்டுமின்றி தொடர்ந்து உள்ளூர் தொடரிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்தார். 

Trending


அடுத்தடுத்து உத்திர பிரதேச அணிக்காக ரஞ்சி தொடர், ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் என அசத்திய அவருக்கு கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடிய அவர் 172 என்கிற பிரம்மாண்ட ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடி 152 ரன்கள் மட்டுமே குவித்திருந்தாலும் பின் வரிசையில் களமிறங்கி தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் அனைவரையும் வியக்க வைத்திருந்தார். அவரது ஐபிஎல் செயல்பாடுகள் மற்றும் உள்ளூர் தொடர்களில் அவர் விளையாடும் ஆட்டத்தை பார்த்த இந்திய அணி நிர்வாகம் தற்போது இஷான் கிஷனுக்கு மாற்றாக அவரை தேர்வு செய்துள்ளது.

இந்நிலையில் துருவ் ஜுரேலின் கிரிக்கெட் வளர்ந்த பாதை குறித்த தகவலும் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் துருவ் ஜுரேல் ஆரம்பத்தில் ஒரு ஆர்மி பள்ளியில் சேர்ந்து பயின்று வந்திருக்கிறார். அப்போது அவருக்கு கிரிக்கெட் மீது ஆர்வம் ஏற்படவே வீட்டிற்கு தெரியாமலேயே ஒரு கிளப் கிரிக்கெட்டில் சேர்ந்தும் இருக்கிறார். பின்னர் அது வீட்டுக்கு தெரிந்த போது அவருடைய தந்தை அவரை திட்டி இருக்கிறார். இருந்தாலும் 800 ரூபாய் கொடுத்து ஒரு கிரிக்கெட் பேட்டையும் வாங்கிக் கொடுத்துள்ளார்.

 

ஆனால் ஒரு முழுமையான கிரிக்கெட் கிட் பேக் வாங்குவதற்கு 6000 முதல் 7000 ரூபாய் வரை வேண்டும் என்றும் தன் தந்தையிடம் பணம் கேட்டிருக்கிறார். அப்போது இனி கிரிக்கெட்டே வேண்டாம் என்று அவரது தந்தையும் மீண்டும் திட்டியுள்ளார். இருந்தும் அவருடைய அம்மா, தங்க செயினை விற்று கிரிக்கெட் கிட் பேக்கை வாங்கி கொடுத்திருக்கிறார். அப்படி கடினமான சூழ்நிலையில் இருந்து முன்னேறி இன்று இந்திய அணிக்கு தேர்வாகும் அளவிற்கு துருவ் ஜுரேல் வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement