
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா 1 – 0 என்ற கணக்கில் தொடரை வென்று தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்தது. இதைத்தொடர்ந்து வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா களமிறங்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது.
அதில் உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு தேவையான வீரர்களுக்கு இந்திய அணி நிர்வாகம் வாய்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரிஷப் பந்த் காயமடைந்துள்ள நிலையில் உலகக் கோப்பையில் கேஎல் ராகுல் மிடில் ஆர்டரில் விக்கெட் கீப்பராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2ஆவது பேக்-அப் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படுவார் என்று நம்பப்படுகிறது. ஏனெனில் 2017இல் அறிமுகமாகி 2021 வரை நிலையற்ற வாய்ப்புகளைப் பெற்ற அவர் ஐபிஎல் தொடரில் போராடி கடந்த வருடம் கிடைத்த வாய்ப்புகளில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டார்.
ஆனாலும் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் கழற்றி விடப்பட்ட அவருக்கு பதில் கேஎல் ராகுல் விளையாடினார். இருப்பினும் தற்போது ராகுல் காயமடைந்துள்ளதால் குறைந்தபட்சம் இந்த தொடரிலாவது அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.