
இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அணியில் இடம்பெறாத காரணத்தால் வர்ணனையாளராக செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக பினிஷராக செயல்பட்டு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதன் தொடர்ச்சியாக அடுத்து வந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். அதில் சிறப்பாக செயல்பட்ட அவர் அணியில் தனது இடத்தை உறுதி படுத்திக்கொண்டதோடு டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றார். ஆனால், அதன்பின்னர் அவருக்கு அணியில் இடம் மறுக்கப்பட்டதால் தற்போது வர்ணனையாளராக பணி புரிந்து வருகிறார்.
இந்த நிலையில், தற்போது உள்நாட்டு தொடரான விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடருக்காக தமிழ்நாடு அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். டி20 தொடரான சையது முஷ்டாக் அலி டி20 தொடரிலேயே தினேஷ் கார்த்திக் இடம்பெறுவார் என கூறப்பட்டது. ஆனால், அந்த தொடருக்கான அணியில் இளம்வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.