Advertisement

ஆர்சிபி அணியை விட்டு வெளியேறுவது ஏமாற்றமாக உள்ளது - மைக் ஹெசன்

கடந்த 4 சீசன்களில் 3 முறைன் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறோம். ஆனால் வீரர்கள், ரசிகர்கள் எதிர்பார்த்தை போல் கோப்பையை மட்டும் வெல்ல முடியவில்லை என ஆர்சிபி அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசன் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan August 05, 2023 • 12:03 PM
ஆர்சிபி அணியை விட்டு வெளியேறுவது ஏமாற்றமாக உள்ளது - மைக் ஹெசன்
ஆர்சிபி அணியை விட்டு வெளியேறுவது ஏமாற்றமாக உள்ளது - மைக் ஹெசன் (Image Source: Google)
Advertisement

நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் ஃபாஃப் டூ பிளஸிஸ் தலைமையிலான ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்தில் முடித்தது. பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் இருந்தும் சொந்த மண்ணில் குஜராத் அணிக்கு எதிரான தோல்வி, அந்த அணிக்கு பின் விளைவுகளை ஏற்படுத்தியது. இதனால் ஆர்சிபி ரசிகர்கள் விரக்தியடைந்தனர்.

ஒரு ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு 16 ஆண்டுகளாக காத்திருப்பதா என்றும் சமூக வலைதளங்களில் புலம்பி தள்ளினர். 2016ஆம் ஆண்டுக்கு பின் உச்சக்கட்ட ஃபார்மில் இருந்த விராட் கோலி 630 ரன்கள் குவித்தும், ஆர்சிபி அணியை காப்பாற்ற முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் 2019ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக மூன்று முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ஆர்சிபி அணி, நடப்பாண்டில் அதை கூட செய்ய முடியவில்லை.

Trending


இதனால் ஆர்சிபி அணி நிர்வாகம் மாற்றமடைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்பட்டது. இதனிடையே ஆர்சிபி அணியின் முன்னாள் வீரர் சாஹல், என்னை ஆர்சிபி அணி நிர்வாகம் எதற்காக ஏலத்தில் வாங்கவில்லை என்பதே தெரியவில்லை. எத்தனை கோடி ஆனாலும் நிச்சயம் வாங்குவோம் என்று உறுதியளித்தனர். ஆனால் ஏலத்திற்கு பின் ஒருவர் கூட என்னிடம் பேசவில்லை என்று கூறினார்.

இவ்வாறு சாஹல் பேசிய அடுத்த நாளிலேயே ஆர்சிபி அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசனுடனான ஒப்பந்தம் முடிவுக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் புதிய பயிற்சியாளர்களை ஆர்சிபி நிர்வாகம் தேடி வந்தது. அந்த நேரத்தில் லக்னோ அணியில் இருந்து நட்சத்திர பயிற்சியாளர் ஆண்டி ஃபிளவர் நீக்கப்பட்டார்.

2009ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி இவரது தலைமையில் டி20 உலகக்கோப்பையை வென்றது. அதன்பின் பாகிஸ்தான் பிரீமியர் லீக், சிபிஎல், அபுதாபி பிரீமியர் லீக், ஐபிஎல் என்று சர்வதேச அளவில் ஏராளமான டி20 லீக் அணிகளுக்கு பயிற்சி அளித்துள்ளார். இதனால் ஆண்டி ஃபிளவருடன் ஆர்சிபி அணி பேச்சுவார்த்தையை தொடங்கியது.

இந்த நிலையில் ஆர்சிபி அணியின் புதிய பயிற்சியாளராக ஆண்டி ஃபிளவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. சுமார் 3 ஆண்டுகள் வரை ஆர்சிபி அணியுடன் ஆண்டி ஃபிளவரின் ஒப்பந்தம் இருக்கிறது. அதேபோல் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கரும் நீக்கப்பட்டுள்ளதால், அவரது இடத்தில் யார் வருகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் ஆர்சிபி பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட மைக் ஹெசனின் இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. இதுகுறித்து மைக் ஹெசன், “கடந்த 4 சீசன்களில் 3 முறைன் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறோம். எங்களால் தொடர்ச்சியாக முன்னேற்றத்தை அடைய முடிந்தது. ஆனால் வீரர்கள், ரசிகர்கள் எதிர்பார்த்தை போல் கோப்பையை மட்டும் வெல்ல முடியவில்லை.

ஆர்சிபி அணியை விட்டு வெளியேறுவது ஏமாற்றமாக உள்ளது. இந்த அணியில் சிறந்த மனிதர்களுடன் பணியாற்றிய சிறந்த அனுபவங்கள் மறக்க முடியாதவை. அதேபோல் வீட்டில் இருப்பதை போன்றே உணர்வை கொடுத்த ஆர்சிபி ரசிகர்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement