மகளிர் யு19 உலகக்கோப்பை 2025: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா!
தென் ஆப்பிரிக்க மகளிர் யு19 அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் யு19 அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதுடன், சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளது.
மகளிர் அண்டர்19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மலேசியாவில் நடைபெற்றது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய மகளி யு19 மற்றும் தென் ஆப்பிரிக்க மகளிர் யு19 அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கோலா லம்பூரில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க யு19 மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய யு19 மகளிர் அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக இல்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சிமோன் லோரன்ஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனை ஜெம்மா போத்தா 16 ரன்களுடன் நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய டயாரா ராம்லகன் 3 ரன்களுக்கும், கேப்டன் கைலா ரெய்னெக் 7 ரன்களுடனும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
Trending
இதனையடுத்து களமிறங்கிய கரபோ மெசோ 10 ரன்களையும், ஃபே கோவ்லிங் 15 ரன்களுக்கும், மீகே வான் வூர்ஸ்ட் 3 பவுண்டரிகளுடன் 23 ரன்களையும் சேர்த்து விக்கெட்டுகளை இழக்க, அடுத்து வந்த வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க யு19 அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 82 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணி தரப்பில் கங்கோடி த்ரிஷா 3 விக்கெட்டுகளையும், பருனிகா சிசோடி, ஆயூஷி ஷகில் மற்றும் வைஷ்னவி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய யு19 அணிக்கு ஜி கமலினி - கங்கோடி த்ரிஷா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கமலினி 8 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் த்ரிஷாவுடன் ஜோடி சேர்ந்த சனிகா சால்கே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கங்கோடி த்ரிஷா 8 பவுண்டரிகளுடன் 44 ரன்களையும், சனிகா சால்கே 4 பவுண்டரிகளுடன் 26 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
Also Read: Funding To Save Test Cricket
இதன்மூலம் இந்திய யு19 அணி 11.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க யு19 அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது. இதன்மூலம் தொடர்ச்சியாக இரண்டாவது முறை இந்திய மகளிர் யு19 அணி யு19 டி20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இத்தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கங்கோடி த்ரிஷா ஆட்டநாயகி மற்றும் தொடர் நாயகி விருதை வென்றார்.
Win Big, Make Your Cricket Tales Now