
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியானது 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 30ஆம் தேதி ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது. ஆனால் தொடர் மழை காரணமாக இப்போட்டியின் முதல் நாள் ஆட்டமானது முழுவதுமாக கைவிடப்பட்டது.
இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியானது முதல் இன்னிங்ஸில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 274 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக சைம் அயூப் 58 ரன்களையும், கேப்டன் ஷான் மசூத் 57 ரன்களையும் அகா சல்மான் 54 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சொர்ற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். வங்கதேச அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மெஹிதி ஹசன் மிராஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணிக்கு ஷாத்மான் இஸ்லாம் - ஜகிர் ஹசன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணியானது விக்கெட் இழப்பின்றி 10 ரன்களை எடுத்திருந்தது. இதனையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை ஷாத்மன் இஸ்லாம் 6 ரன்களுடனும், ஜகிர் ஹசன் ரன்கள் ஏதுமின்றியும் தொடர்ந்தனர். இதில் ஜகிர் ஹசன் ஒரு ரன்னிலும், ஷாத்மான் இஸ்லாம் 10 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் நஜ்முல் ஹொசைன் சனடோ 4 ரன்களிலும், மொமினுல் ஹக் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.