
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டிகளிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் என வெற்றிபெற்றுள்ளன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை (பிப்.23) ராஞ்சியில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
அதேசமயம் இங்கிலாந்து அணி இப்போட்டியில் வென்றால் மட்டுமே டெஸ்ட் தொடரில் நீடிக்கும் என்பதால் அவர்களும் கடும் சவாலளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து இரு அணி வீரர்களும் ராஞ்சி சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இந்த அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்பன் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் மற்றும் சுழற்பந்து வீச்சாள ரெஹான் அஹ்மத் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு ஒல்லி ராபின்சன் மற்றும் இளம் வீரர் சோயப் பஷீர் ஆகியோருக்கு இப்போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக சோயப் பஷீர் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் இடம்பிடித்திருந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது மீண்டும் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.