
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டியிலும் வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இந்திய அணியானது முதலிரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று தொடரை வென்றுள்ள நிலையில் இப்போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதேசமயம் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இங்கிலாந்து விளையாடும் என்பதால் ரசிகர்களின் கவனமும் இப்போட்டியின் மீது உள்ளது.
மேற்கொண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்னதாக இரு அணிகளும் பங்கேற்கும் கடைசி ஒருநாள் தொடர் இது என்பதால், இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்தாலும் அது தனக்கு ஒரு பொருட்டல்ல என்றும், அணியின் ஒரே கவனம் சாம்பியன்ஸ் கோப்பை வெல்வதில் மட்டுமே இருக்கும் என்றும் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் கூறியுள்ளார்.