காயம் காரணமாக முக்கிய தொடர்களை இழக்கும் ஆர்ச்சர்; இங்கிலாந்துக்கு பெரும் பின்னடைவு!
இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக இந்தியாவுடனான டெஸ்ட் தொடர், டி20 உலகக் கோப்பை, ஆஷஸ் தொடர்களில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணியின் சென்சேஷன் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர். இவர் காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் ஓய்வில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் அவருக்கு கடந்த வாரம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதன் முடிவில் அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக நடப்பாண்டு நடைபெறவுள்ளஅனைத்து கிரிக்கெட் தொடர்களிலும் அவர் பங்கேற்கமாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதனால் ஜோஃப்ரா ஆர்ச்சர் இந்தியாவுடனான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், டி20 உலகக் கோப்பை மற்றும் ஆஷஸ் தொடர்களில் அவரால் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
ஏற்கெனவே இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், மன அழுத்தம் காரணமாக கிரிக்கெட்டிலிருந்து காலவரையின்றி இடைவெளி எடுத்துள்ள நிலையில், முக்கியமான தொடர்களில் ஆர்ச்சரும் இல்லாமல்போவது இங்கிலாந்துக்குப் பெரிய இழப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now