ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது எதிர்வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் இத்தொடரில் பங்கேற்கும் நிலையில், அந்த அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், குரூப் பி பிவிரில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.
மேற்கொண்டு இந்த உலகக்கோப்பை தொடருக்கான புதுபிக்கப்பட்ட போட்டி அட்டவணையையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அதன் படி, இந்தியா, ஆஸ்திரேலியா மற்று பாகிஸ்தானின் மகளிர் அணிகளை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன.
இந்நிலையில் இந்த தொடருக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ஹீதர் நைட் தலைமையிலான அந்த அணியில் 15 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். இந்த அணியில் அணியின் நட்சத்திர தொடக்க வீராங்கனை டாமி பியூமண்ட், வேகப்பந்து வீச்சாளர்கள் கேட் கிராஸ் மற்றும் லாரன் ஃபில்லர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.