
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 25ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் தங்களுடைய சொந்த மண்ணில் கடந்த 12 வருடங்களாக தோல்வியை சந்திக்காமல் வெற்றி நடை போடும் இந்தியா இம்முறையும் இங்கிலாந்தை தோற்கடித்து தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆனால் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டி20 கிரிக்கெட்டை போல டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாக விளையாடும் இங்கிலாந்து இம்முறை இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடிக்கும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.
அந்த வகையில் கடந்த 2022 டிசம்பர் மாதம் பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அந்நாட்டு அணிக்கெதிராக அதிரடியாக விளையாடி பென் ஸ்டோக்ஸ் தலைமையில் 3 -0 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்றதாக ஜேம்ஸ் ஆண்டர்சன் கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். அந்த வரிசையில் கிட்டத்தட்ட பாகிஸ்தான் போன்ற சூழ்நிலைகளை கொண்ட இந்தியாவிலும் அதிரடியாக விளையாடி கோப்பையை வெல்ல ஆவலுடன் காத்திருப்பதாக ஆண்டர்சன் கூறினார்.
இந்நிலையில் பாகிஸ்தான் மண்ணில் தார் ரோடுபோல இருந்த பிட்சுகள் இந்தியாவில் இருக்காது என்று முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா கூறியுள்ளார். அதனால் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானங்களில் அஸ்வின் போன்ற இந்திய ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்ளும் திட்டத்துடன் களமிறங்காமல் போனால் இங்கிலாந்து அதற்கான பலனை சந்திக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.