
பாகிஸ்தான் அணியானது சமீபத்தில் வங்கதேச அணியும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் மோசமான தோல்வியைத் தழுவிய பாகிஸ்தான் அணி, வரலாற்றில் முதல் முறையாக வங்கதேச அணியிடம் டெஸ்ட் தொடரை இழந்தது.
இதனையடுத்து பாகிஸ்தான் அணி அடுத்த மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி எதிர்வரும் அக்டோபர் மாதம் 7ஆம் தேதி தொடங்கும் இந்த டெஸ்ட் தொடரானது அக்டோபர் 28ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரின் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளும் முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், மூன்றாவது போட்டி மட்டும் ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் டெஸ்ட் அணிகள் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் சமீபத்தில் அறிவித்தன. இந்நிலையில் இத்தொடருக்கான இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டிருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹல் காயம் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.