
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் குரூப் சி பிரிவில் இடம்பிடித்திருந்த ஆஃப்கானிஸ்தான் மற்றும் உகாண்டா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற உகாண்டா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு குர்பாஸ் மற்றும் ஸத்ரான் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ரஹ்மனுல்லா குர்பாஸ் 76 ரன்களையும், இப்ராஹிம் ஸத்ரான் 70 ரன்களையும் சேர்த்தனர். உகாண்டா அணி தரப்பில் காஸ்மஸ் கேவூடா, கேப்டன் பிரையன் மசாபா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய உகாண்டா அணியானது ஆஃப்கானிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் உகாண்டா அணி 16 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 58 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணியானது 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.