
ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப் போட்டி வரலாற்றில் 2019ஆம் ஆண்டு கடந்த முறை இங்கிலாந்து நியூசிலாந்து மோதிக்கொண்ட இறுதிப்போட்டிதான் உச்சமான இறுதிப் போட்டியாக இருக்கிறது. பல்வேறு திருப்பங்களைக் கொண்ட அந்தப் போட்டியில், இறுதியாக இரண்டு முறை ஸ்கோர் சமனில் முடிய, அதிக பவுண்டரி அடிக்கப்பட்ட அணி வென்றதாக இங்கிலாந்துக்கு உலகக்கோப்பை கொடுக்கப்பட்டது.
இது எல்லா நேரத்திலுமே சர்ச்சையான ஒரு முடிவாகவே கிரிக்கெட் உலகத்தில் பார்க்கப்படுகிறது. இந்த விதி தற்பொழுது இந்த உலகக் கோப்பையில் மாற்றி எழுதப்பட்டிருக்கிறது. இறுதிவரை யார் வெற்றி, தோல்வி? என்று தெரியும் வரை சூப்பர் ஓவர் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று தொடங்க உள்ள ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் இந்த இரு அணிகளும் விளையாடும் போட்டியின் மூலமாக 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை துவங்கி வைக்க இருக்கின்றன.
பலத்த எதிர்பார்ப்புடன், தனிப்பட்ட அதிரடியான அணுகு முறையுடன் இங்கிலாந்து அணி களம் இறங்க இருக்கிறது. இந்த முறை உலக கோப்பையை வெல்லுவதற்கான வாய்ப்பில் முதல் அணியாக இங்கிலாந்தை நிறைய பேர் கணித்திருக்கிறார்கள். அதே சமயத்தில் உலகக்கோப்பையில் யாருக்கு வேண்டுமானாலும் அதிர்ச்சி அளிக்கக் கூடிய அணியாக நியூசிலாந்து இதுவரை இருந்து வந்திருக்கிறது. எனவே இன்றைய போட்டி மீது நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது.