
அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. சென்னை அணி பட்டம் வென்றதோடு, அதிரடி வீரர் அம்பாதி ராயுடு ஓய்வையும் அறிவித்தார். இறுதிப்போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய அம்பாதி ராயுடு, இன்னும் சில ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடி இருக்கலாம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக அம்பாதி ராயுடு அமெரிக்காவில் நடக்கும் மேஜர் டி20 லீக் தொடரில் பங்கேற்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியது. இந்திய வீரர்கள் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றால் மட்டுமே, வெளிநாட்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாட முடியும். இதனால் மேஜர் லீக் தொடரில் விளையாடுவதற்காக ராயுடு ஓய்வை அறிவித்ததாக பார்க்கப்பட்டது.
ஆனால் அம்பாதி ராயுடுவின் ஓய்வு அறிவிப்புக்கு பின் இன்னொரு காரணமும் இருப்பது தெரிய வந்துள்ளது. அண்மையில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை ஐபிஎல் கோப்பையுடன் சென்று அம்பாதி ராயுடு சந்தித்தார். இதனால் அம்பாதி ராயுடு விரைவில் அரசியலில் ஈடுபடலாம் என்று பார்க்கப்பட்டது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைய அதிக வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்பட்டது.