Advertisement

விராட் கோலி குறித்து சேத்தன் சர்மா தேவையில்லாமல் பேசியுள்ளார் - சல்மான் பட்

விராட் கோலியை பற்றி இந்திய அணி தலைமை தேர்வாளர் சேத்தன் ஷர்மா பேசியது தேவையில்லாதது என்றும் முடிந்த விஷயத்தை அத்துடன் விடாமல் மீண்டும் மீண்டும் அதைப்பற்றி பேசுவது இந்திய அணியின் ஆட்டத்தை பாதிக்கும் என்று சல்மான் பட் பேசியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan January 02, 2022 • 19:53 PM
Former Pakistan Skipper Slams Chetan Sharma For Statement on Virat Kohli
Former Pakistan Skipper Slams Chetan Sharma For Statement on Virat Kohli (Image Source: Google)
Advertisement

இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகிய விராட் கோலி, ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். விராட் கோலி கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரமும், அதைச்சுற்றி நடந்த சம்பவங்களும் பெரும் சர்ச்சையாக வெடித்தன.

விராட் கோலி திடீரென ஒருநாள் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்ட விதம் விமர்சனத்துக்குள்ளானது. ஒருநாள் அணியின் கேப்டனாக தொடர விரும்பிய கோலியை நீக்கியது விமர்சனத்துக்குள்ளானதால், அதுகுறித்து பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி, விராட் கோலியை டி20 கேப்டன்சியிலிருந்து விலகவேண்டாம் என்று நான் தனிப்பட்ட முறையில் வலியுறுத்தினேன். ஆனால் அவர் அதை கேட்காமல் டி20 கேப்டன்சியிலிருந்து விலகிவிட்டார். வெள்ளைப்பந்து அணிகளை வெவ்வேறு கேப்டன்கள் வழிநடத்துவது சரியாக இருக்காது என்று தேர்வாளர்கள் கருதியதால், விராட் கோலி ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டதாக கங்குலி தெரிவித்திருந்தார்.

Trending


ஆனால் தென் ஆப்பிரிக்காவிற்கு கிளம்புவதற்கு முன்பான செய்தியாளர் சந்திப்பில் பேசிய விராட் கோலி, நான் டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகுவதாக கூறியபோது, அதை பிசிசிஐ தரப்பில் முழுமனதாக ஏற்றுக்கொண்டனர். கேப்டன்சியிலிருந்து விலகவேண்டாம் என்று என்னிடம் யாரும் கூறவில்லை. என்னை ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்குவதாக கடைசி நேரத்தில் தான் தெரிவித்தனரே தவிர, முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்றார் கோலி.

பிசிசிஐ தலைவர் கங்குலியின் கருத்துக்கு கோலியின் கருத்து முற்றிலும் முரண்பாடாக இருந்ததையடுத்து, இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகவும் விவாதப்பொருளாகவும் உருவெடுத்தது. 

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அண்மையில் பேசிய தேர்வுக்குழு தலைவர் சேத்தன் ஷர்மா, “விராட் கோலி டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலக வேண்டாம் என்று அறிவுறுத்தினோம். அவரை யாரும் டி20 கேப்டன்சியிலிருந்து நீக்கவில்லை. அவராகத்தான் விலகினார். வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளுக்கு ஒரேயொரு கேப்டன் தான் இருக்க முடியும். அதுதான் தேர்வாளர்களுக்கு அணி தேர்வு குறித்து திட்டமிட வசதியாக இருக்கும். எனவே டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகினால் ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்க நேரிடும் என்று கோலியிடம் கூறினோம். ஆனால் கோலி அதை ஏற்கவில்லை” என்று கூறியிருந்தார்.

இதனால் மீண்டும் கோலி vs பிசிசிஐ பிரச்னை உருவெடுக்க ஆரம்பித்துள்ளது. இதையடுத்து கோலி குறித்து சேத்தன் ஷர்மா பேசியது பற்றி பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் கருத்து கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசிய சல்மான் பட், “கோலி பற்றிய டாபிக்கை இப்போது பேச வேண்டிய அவசியமே இல்லை. இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கிறது. முதல் டெஸ்ட்டில் வெற்றியும் பெற்றிருக்கிறது. அதுவும், அணியை வழிநடத்திக்கொண்டிருக்கும் கேப்டனை பற்றியே பேசுகிறீர்கள். 

மிஸ்கம்யூனிகேஷன் நடப்பது இயல்புதான். அது பெரிய விஷயமல்ல. அணி வெற்றி பெற்று நல்ல ரிதமில் இருக்கும்போது தேவையில்லாததை பற்றி பேசக்கூடாது. முடிந்த விஷயத்தை அத்துடன் முடித்துவிட வேண்டும். அதுபற்றி பிரஸ்மீட்டில் யாராவது கேள்வி கேட்டால்கூட, அதை கடந்து சென்றுவிட வேண்டும். கோலியை பற்றி இப்போது பேசியது கண்டிப்பாக தேவையில்லாத ஒன்று” என தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement