
Gautam Gambhir: இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் எஞ்சிய போட்டிகளில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பணிச்சுமையை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை என இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லீட்ஸில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகிக்கிறது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி ஜூலை 2ஆம் தேதி பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ளது.
இதில் ஏற்கெனவே முதல் போட்டியில் வெற்றிக்கு அருகில் இருந்து தோல்வியைத் தழுவிய இந்திய அணி இப்போட்டியில் எவ்வாறு கம்பேக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக இப்போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா என்ற கேள்வியும் அதிகரித்துள்ளது. இத்தொடருக்கு முன்னரே ஜஸ்பிரித் பும்ரா 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.