ஜஸ்பிரித் பும்ரா மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடுவர் - கௌதம் கம்பீர்
பும்ராவின் பணிச்சுமை திட்டத்தை நாங்கள் மாற்ற மாட்டோம். அவரது பணிச்சுமையை நிர்வகிப்பது எங்களுக்கு மிகவும் முக்கியமானது என்று தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

Gautam Gambhir: இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் எஞ்சிய போட்டிகளில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பணிச்சுமையை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை என இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லீட்ஸில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகிக்கிறது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி ஜூலை 2ஆம் தேதி பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ளது.
இதில் ஏற்கெனவே முதல் போட்டியில் வெற்றிக்கு அருகில் இருந்து தோல்வியைத் தழுவிய இந்திய அணி இப்போட்டியில் எவ்வாறு கம்பேக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக இப்போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா என்ற கேள்வியும் அதிகரித்துள்ளது. இத்தொடருக்கு முன்னரே ஜஸ்பிரித் பும்ரா 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அவர் எந்தெந்த போட்டிகளில் விளையாடுவார் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை. இதையடுத்து லீட்ஸில் நடைபெற்ற முதல் போட்டியில் விளையாடிய பும்ரா முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. மேலும் அவர் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தமாக 44 ஓவர்களை வீசி இருந்தார். ஏற்கெனவே காயம் குறித்து அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் பும்ரா அடுத்த போட்டியில் விளையாடுவாரா என்பது கேள்விக்குறி தான்.
இந்நிலையில் ஹெடிங்லே தோல்விக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், டெஸ்ட் தொடரின் எஞ்சிய போட்டிகளில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பணிச்சுமையை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “பும்ராவின் பணிச்சுமை திட்டத்தை நாங்கள் மாற்ற மாட்டோம். அவரது பணிச்சுமையை நிர்வகிப்பது எங்களுக்கு மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்.
ஏனென்றால் கிரிக்கெட் நிறைய முன்னேறி வருகிறது, மேலும் அவரால் என்ன செய்ய முடியும் என்பது எங்களுக்குத் தெரியும். எனவே அவர் இந்த சுற்றுப்பயணத்திற்கு வருவதற்கு முன்பே, மூன்று டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாட வைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. அதற்கு அவரது உடல் எப்படி உதவும் என்பதை நாங்கள் பர்க்க வேண்டும். இருப்பினும் அவர் எஞ்சியுள்ள போட்டிகளில் எந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்பதை நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை.
Also Read: LIVE Cricket Score
அதேசமயம் இத்தொடருக்கான இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் குறித்து பேசினால் ஒரு பந்து வீச்சாளர் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார், ஒருவர் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார், ஒருவர் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார், ஒருவர் இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் கூட ஆகவில்லை. அதனால் நாம் அவர்களுக்கு தேவையான நேரத்தைக் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now