
ஐபிஎல் 16ஆவது சீசனில் நேற்று நடைபெற்ற 19ஆவது போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணிக்கு இங்கிலாந்தின் 24 வயதான இளம் நம்பிக்கை நட்சத்திரம் ஹாரி ப்ரூக் 55 பந்தில் சதம் அடித்து, அணி நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்கள் எடுக்க பெரிதும் உதவியாக இருந்தார். இந்த தொடரில் இவர் அடித்த ஆட்டம் இழக்காத இந்த சதம் இந்தத் தொடரில் முதல் சதமாகும்.
பெரிய இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணிக்கு இறுதியில் 24 ரன் வித்தியாசத்தில் தோல்வியே வந்தது. கடுமையாக போராடிய நிதிஷ் ரானா மற்றும் ரிங்கு சிங் இருவரும் அரை சதம் எடுத்தார்கள். ஆனாலும் கடைசி ஓவரில் 32 ரன்கள் தேவை என்ற காரணத்தால் இலக்கை வெற்றிகரமாக தாண்ட முடியவில்லை. இரு அணிகளுமே தங்களது நான்காவது போட்டியில் முடிவில் இரண்டு வெற்றி இரண்டு தோல்வியுடன் உள்ளார்கள்.
சதம் அடித்து ஆட்ட நாயகன் விருதை வென்ற ஹாரி ப்ரூக் பேசுகையில் “இப்போது என் கேர்ள் பிரண்ட் மட்டுமே இருக்கிறாள். என் குடும்பத்தினர் ஜஸ்ட் கிளம்பி சென்று விட்டார்கள். அவர்கள் இருந்தால் என்னால் ரன்கள் அடிக்க முடியாது என்று எனக்கு தெரியும். நான் இங்கு சுழற்பந்து வீச்சில் விளையாட சற்று சிரமப்பட்டேன். எனவே பவர் பிளேவை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தேன். மேலும் மிடில் ஓவர்களில் ஸ்டிரைக் ரொட்டேட் செய்து சுழற் பந்துவீச்சை மற்றவர்கள் விளையாடுவதற்கு கொடுத்தேன்.