
ஐபிஎல் 17ஆவது சீசன் கிரிக்கெட் தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா தங்களுடைய புதிய கேப்டனாக செயல்படுவார் என்று மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் அறிவித்தது அந்த அணி ரசிகர்களையே கொந்தளிக்க வைத்தது. ஏனெனில் சச்சின் டெண்டுல்கர் கூட கோப்பையை வெல்ல முடியாமல் திணறி வந்த மும்பைக்கு 2013இல் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் வருடத்திலேயே ரோஹித் சர்மா சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார்.
அதை தொடர்ந்து 2015, 2017, 2019, 2020 ஆகிய வருடங்களில் மொத்தம் 5 கோப்பைகளை வென்ற அவர் குறுகிய காலத்திலேயே மும்பையை வெற்றிகரமான அணியாக சாதனை படைக்க வைத்து இன்று இந்தியாவின் கேப்டனாகும் அளவுக்கு முன்னேறியுள்ளார். அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் வெற்றிகரமாக ஜொலிப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கும் அவர் கடைசி வரை கேப்டனாக செயல்படுவார் என்று அனைவரும் நம்பிக் கொண்டிருந்தனர்.
ஆனால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு 2022 ஐபிஎல் கோப்பையை வென்ற ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து வலுக்கட்டாயமாக வாங்கிய மும்பை தற்போது ரோஹித் சர்மாவை கழற்றி விட்டு புதிய கேப்டனாக அறிவித்துள்ளது. இதனால் கோபமடைந்த ரசிகர்களில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒரே நாளில் இன்ஸ்டாகிராமில் மும்பையை பின் தொடர்வதை நிறுத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.