
இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றில் எம்எஸ் தோனியின் பக்கங்கள், மிக முக்கியமானவை. இந்திய அணியை வழிநடத்தியதிலும், தன் பங்களிப்பை செலுத்தியதிலும் மகேந்திர சிங் தோனி, அன்றும், இன்றும், என்றும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். வயதிற்கும் திறமைக்கும் தொடர்பில்லை என்பதை நிரூபித்த தோனி, இன்றும் ஒரு அணியை வழிநடத்தும் கேப்டனாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார். தொடக்கம் முதல் கடைசி வரை எந்த விமர்சனமும் இல்லாமல், ‘கூல் கேப்டனாக’ ஓய்வு பெற்ற எம்எஸ் தேனி, இன்றும் அதே உடல்திறனோடு கிரிக்கெட் விளையாட்டை எதிர்கொள்கிறார்.
தோனி கேப்டனாக இருந்த சமயத்தில், அவரின் அன்பான வழிநடத்தலால், ஜூனியர் விளையாட்டு வீரர்கள் பலருக்கும் அவர் மீது அலாதி அன்பு. குறிப்பாக சுரேஷ் ரெய்னா, ரவீந்தர் ஜடேஜா, ஹர்திக் பாண்டியா என தோனியின் நிழலாய் இருந்தவர்கள் பலர்.
அவர் ஓய்வு பெற்றாலும், தோனியை அவர்கள் அவ்வப்போது சந்திப்பதை தவிர்த்தது இல்லை. ஆசானாக, அண்ணனாக, ஆலோசகராக அவர்களுடன் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார் தோனி. அந்த வகையில் சில தினங்களுக்கு முன், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என வெற்றி பெற்ற இந்திய அணியில் இடம் பெற்ற ஹர்திக் பாண்டியா, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி வந்து, தோனியை சந்தித்துள்ளார்.