Advertisement

ஆசிய விளையாட்டு போட்டிகள்: ஹர்மன்ப்ரீத் கவுருக்கு விளையாட தடை?

இந்திய மகளிர் அணியின்கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஆசிய விளையாட்டு போட்டிகளில் 2 ஆட்டங்களில் பங்கேற்க தடை விதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan July 25, 2023 • 12:32 PM
ஆசிய விளையாட்டு போட்டிகள்: ஹர்மன்ப்ரீத் கவுருக்கு விளையாட தடை?
ஆசிய விளையாட்டு போட்டிகள்: ஹர்மன்ப்ரீத் கவுருக்கு விளையாட தடை? (Image Source: Google)
Advertisement

வங்கதேசம் சென்ற இந்திய மகளிர் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. மிர்புரில் நடந்த மூன்றாவது போட்டி ‘டை’ ஆனது. இப்போட்டியில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத், நகிதா பந்தில் ‘கேட்ச்’ ஆனதாக, நடுவர் தன்விர் அகமது (வங்கதேசம்) அவுட் கொடுத்தார்.

ஆனால் பந்து கால் ‘பேடில்’ பட்டுச் சென்றதாக கூறிய ஹர்மன்பிரீத் கவுர், கோபத்தில் ‘ஸ்டம்சை’ அடித்தார். பின் நடுவரிடம் வாக்குவாதம் செய்து கொண்டே சென்றார். இதுகுறித்து ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், ‘‘போட்டியில் நடுவர்கள் தவறான தீர்ப்புகள் வழங்கினர். இது ஏமாற்றமாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. அடுத்த முறை வங்கதேசம் வரும் போது இதுபோன்ற நடுவர்களின் தீர்ப்புகளை எதிர்கொள்ளும் வகையில் தயாராகி வர வேண்டும்,’’ என்றார். 

Trending


அடுத்து கோப்பை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஒருநாள் தொடர் 1–1 என சமன் ஆனதால், இரு அணியினரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்காக வந்த வங்கதேச அணி வீராங்கனைகளைப் பார்த்து ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில்,‘‘ ஏன் நீங்கள் மட்டும் வந்துள்ளீர்கள். நடுவர்கள் தான் உங்களுக்காக போட்டியை ‘டை’யில் முடித்துக் கொடுத்தனர். அவர்களையும் கூப்பிடுங்கள், எல்லோரும் சேர்ந்து புகைப்படம் எடுத்தால் எங்களுக்கு நன்றாக இருக்கும்,’’ என்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கதேச அணி கேப்டன் நிகர் சுல்தானா, தனது அணியினரை அழைத்துக் கொண்டு வேகமாக டிரசிங் ரூம் சென்று விட்டார். தவிர, ஹர்மன்பிரீத் கவுர் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து போட்டி நடுவர் அக்தர் அகமது, ஸ்டம்சை சேதப்படுத்தியதற்கு 3, அம்பயர் தீர்ப்பை விமர்சித்ததற்கு 1 என 4 தகுதியிழப்பு புள்ளி ஹர்மன்பிரீத் கவுருக்கு வழங்க வேண்டும், என ஐசிசிக்கு பரிந்துரை செய்துள்ளார்.

இறுதி முடிவு எடுக்கும் முன் ஐசிசி சார்பில் பிசிசிஐயிடம்பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. ஐசிசி விதிப்படி 24 மாத இடைவெளியில் 4 தகுதியிழப்பு புள்ளி பெற்றால், 1 டெஸ்ட் அல்லது 2 ஒருநாள் அல்லது 2 டி20 போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்படும். இதனால் ஹர்மன்பிரீத் கவுருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2017 உலக கோப்பை அரையிறுதியில் ‘ஹெல்மெட்டை’ துாக்கி எறிந்த ஹர்மன்பிரீத் கவுர், 1 தகுதியிழப்பு புள்ளி பெற்றார். தவிர இந்தியாவின் வேதா உட்பட இதுவரை சர்வதேச அளவில் 29 வீராங்கனைகள் இதுபோல விதிமீறலில் ஈடுபட்டனர். இம்முறை ஹர்மன்பிரீத் கவுருக்கு 4 புள்ளி கிடைக்கலாம்.

இதனால் விதிமீறலில் ஈடுபட்டு போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்ட முதல் கிரிக்கெட் வீராங்கனை என்ற பெயர் இவருக்கு கிடைக்கலாம். இந்திய மகளி அணி அடுத்து, சீனாவில் நடக்கும் ஆசிய விளையாட்டில் பங்கேற்க உள்ளது. இத்தொடருக்கும் ஐசிசிக்கும் சம்பந்தமில்லை என்பதால், ஒருவேளை தடை விதித்தாலும், ஹர்மன்பிரீத் கவுர் ஆசிய விளையாட்டில் பங்கேற்கலாம்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement