
ஐபிஎல் தொடரில் நேற்று லக்னோ மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில பலம்மிக்க லக்னோ அணியை இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் அவர்களது சொந்த மைதானத்தில் பஞ்சாப் அணி வீழ்த்தி ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. கேப்டனாக கேஎல் ராகுல் தலைமை ஏற்று இருக்கும் லக்னோ அணி கடந்த போட்டியில் 200+ இலக்கை அபாரமாக துரத்தி பெங்களூர் அணிக்கு எதிராக பெங்களூர் மைதானத்தில் வெற்றி பெற்று இருந்தது.
அந்த அணியில் கையில் மேயர்ஸ், நிக்கோலஸ் பூரன், ஸ்டாய்னிஸ் என அதிரடி பேட்ஸ்மேன்கள் ஒருபுறம் இருக்க, கே எல் ராகுல், தீபக் ஹூடா, குர்னால் பாண்டியா என சிறப்பான இந்திய பேட்ஸ்மேன்கள் ஒரு புறம் இருக்கிறார்கள். மேலும் பந்துவீச்சிலும் அபாரமான அணியாக இருக்கிறது. இப்படியான நிலையில் இந்தப் போட்டி லக்னோ அணியின் சொந்த மைதானத்தில் நடந்த நிலையில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் காயத்தால் விளையாட முடியாதது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. ஏற்கனவே பேட்டிங் பெரிய பலவீனமான ஒன்றாக பஞ்சாப் அணிக்கு இருக்கிறது.
இப்படி இந்த போட்டியில் லக்னோ அணி வெல்லவே அதிக வாய்ப்பு இருந்த நிலையில் அவர்களை 159 ரன்களுக்கு கட்டுப்படுத்தி, பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டு இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வீழ்த்தி ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. மேத்யூ ஷார்ட் துவக்கத்திலும், சிக்கந்தர் ராஸா நடுவிலும், இறுதியில் ஷாருக்கானும் சிறப்பாக செயல்பட இந்த வெற்றி சாத்தியமாகி இருக்கிறது.