
அஹ்மதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை பேட் செய்யச் சொல்லி பணித்தது. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் கில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்டனர். வழக்கம் போலவே ரோஹித் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
அதேசமயம் மறுபக்கம் ஸ்டார்க் வீசிய ஐந்தாவது ஓவரில் மிட்-ஆன் திசையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ஷுப்மன் கில். தனது பேவரைட் ஷாட்டை ஆட முயன்று அவர் தனது விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து வந்த கோலி, ஸ்டார்க் வீசிய அடுத்த ஓவரில் ஹாட்-ட்ரிக் பவுண்டரி விரட்டி அசத்தியிருந்தார்.மறுபக்கம் 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்த கேப்டன் ரோஹித், மேக்ஸ்வெல் சுழலில் ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் அபாரமாக கேட்ச் பிடித்து ரோகித் சர்மாவை வெளியேற்றினார்.
அதற்கு முந்தைய இரண்டு பந்துகளில் சிக்ஸ் மற்றும் பவுண்டரி அடித்திருதும் அடுத்த பந்தே ரோஹித் வெளியேறினார். பின் 11ஆவது ஓவரில் ஸ்ரேயஸ் ஐயர் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். கம்மின்ஸ் வீசிய லெந்த் பந்தில் முன்வந்து ஆடுவதா அல்லது பின்னிருந்த படியே ஆடுவதா என்ற குழப்பத்தில் விக்கெட் கீப்பரிடம் எட்ஜ் கொடுத்து வெளியேறினார்.