
ஐசிசியின் புதிய வருவாய் பகிர்மானத் திட்டத்திற்கு அசோசியேட் அணிகளின் வாரியங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த வருவாய் பகிர்மான மாதிரி கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு உதவாது என்று அவர்கள் விமர்சனம் செய்துள்ளனர். இந்தப் புதிய வருவாய் மாதிரியில் ஐசிசி-யின் மொத்த வருவாயில் பிசிசிஐ மட்டுமே 38.5% வருவாயைப் பெறும். ஐசிசியின் 12 பிரதான உறுப்பு வாரியங்கள் 88.81% வருவாயை எடுத்துச் செல்ல மீதமுள்ள தொகை 94 அசோசியேட் வாரியங்களுக்காம். இப்படியான சமச்சீரற்ற வருவாய் பகிர்மானத்திற்கு எதிர்ப்பு கிளம்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஐசிசி அசோசியேட் வாரிய உறுப்பினர்களில் ஒருவரான சுமோத் தாமோதர், “அசோசியேட் வாரிய உறுப்பினராக இந்த வருவாய் மாதிரி கடும் ஏமாற்றத்தை அளிக்கின்றது. அசோசியேட் வாரியங்களுக்கு ஏன் இந்தத் தொகை மிகமிகச் சிறியது என்பதற்கான ஏகப்பட்ட நடைமுறைக் காரணிகள் உள்ளன. அசோசியேட் அணிகள் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் அந்தஸ்தைப் பெறும்போது அதனைத் தக்கவைக்க அதிக செலவாகும். இந்த வருவாய்ப் பகிர்மான மாதிரியில் அது நடக்காது” என்கிறார்.
உதாரணமாக நேபாளம் ஆடவர் கிரிக்கெட்டில் நல்ல வளர்ச்சி கண்டு வருகின்றது. மகளிர் கிரிக்கெட்டில் தாய்லாந்து நல்ல வளர்ச்சி கண்டு வருகின்றது. இந்த இரண்டு வாரியங்களும் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள ஐசிசியின் இந்த வருவாய் மாதிரி நிச்சயம் போதாது. கிரிக்கெட் வளர்ச்சி என்று ஐபிஎல் தொடர்களுக்கு வரி விலக்கு பெறும் பிசிசிஐ ஏன் அசோசியேட் உறுப்பினர்களுக்காக விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற கேள்வியும் எழத்தான் செய்கின்றது.