
இந்திய அணி கடைசியாக மகேந்திர சிங் தோனி தலைமையில் 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை வென்றது. அந்த குறிப்பிட்ட உலகக் கோப்பை தொடரில் விளையாடிய விராட் கோலி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவர் மட்டுமே தற்பொழுது 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்திய அணியில் இடம் பெற்று இருக்கிறார்கள்.
இதில் ரவிச்சந்திரன் அஸ்வின் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தார். இந்த வாய்ப்பு தனக்கு வரும் என்றுதான் நம்பவே இல்லை என்பதையும் அவர் ஏற்கனவே கூறியிருந்தார். அக்சர் படேல் காயம் அடைந்ததன் காரணமாக அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் அவருக்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
பத்து ஓவர்கள் பந்துவீசி கேமரூன் கிரீன் விக்கெட்டை கைப்பற்றி 40க்கும் குறைவான ரன்கள் கொடுத்து அசத்தியிருந்தார். ஆனால் அதற்குப் பிறகு அவருக்கு இதுவரை விளையாடும் அணியில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. ஆனால் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணிக்கான சிறந்த ஆலோசகராக உள்ளிருந்து செயல்பட்டு வருகிறார்.