
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று டாக்கா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்ததால் இந்திய அணி பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது வங்கதேசம் அணி வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 41.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்களை மட்டுமே குவித்தது. இந்திய அணி சார்பாக கே.எல் ராகுல் 73 ரன்கள் குவித்தார். அவரை தவிர்த்து வேறு எந்த வீரரும் 30 ரன்கள் கூட தொடவில்லை.
இதனை தொடர்ந்து 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேசம் அணியானது 46ஆவது ஓவரின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆரம்பத்தில் வங்கதேச அணி மிகச் சிறப்பாக விளையாடினாலும் மிடில் ஓவர்களில் சிராஜ் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோறது சிறப்பான பந்துவீச்சு காரணமாக ஒரு கட்டத்தில் வங்கதேச அணி 136 ரன்களுக்கு ஒன்பது விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
வெற்றிக்கு இன்னும் 51 ரன்கள் தேவை என்ற நிலையில் ஒரு விக்கெட் மட்டுமே எஞ்சி இருந்ததால் நிச்சயம் இந்த போட்டியில் இந்திய அணியே வெற்றி பெறும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் இருந்தது. ஆனால் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வங்கதேச கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான மெஹதி ஹாசன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ரகுமான் ஆகிய இருவரும் கடைசி விக்கெட்டிற்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.