Advertisement

இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: தீவிர பயிற்சியில் சர்ஃப்ராஸ், ஜுரெல்!

இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர்கள் சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜுரெல் ஆகியோர் அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan February 13, 2024 • 20:02 PM
இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: தீவிர பயிற்சியில் சர்ஃப்ராஸ், ஜுரெல்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: தீவிர பயிற்சியில் சர்ஃப்ராஸ், ஜுரெல்! (Image Source: Google)
Advertisement

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணியின் முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து காயங்களைச் சந்தித்து தொடரிலிருந்து விலகுவது வாடிக்கையாகி வருகிறது. அந்தவகையில் முகமது ஷமி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னரே காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகினர். 

அவர்களைத் தொடர்ந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களினால் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகிய நிலையில், அதன்பின் மீதமிருந்த 3 போட்டிகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். அதேசமயம் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் காயங்களைச் சந்தித்து இரண்டாவது போட்டியிலிருந்து விலகினர். 

Trending


அதன்பின் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வந்த இருவரும் மீதமுள்ள டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டாலும், அவர்களின் உடற்தகுதியைப் பொறுத்தே விளையாடுவார்கள் என பிசிசிஐ அறிவித்திருந்தார். ஆனால் இதில் கேஎல் ராகுல் உடற்தகுதியை எட்டாததால் 3ஆவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ள நிலையில், ரவீந்திர ஜடேஜா குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

இதனால் இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி களமிறங்கவுள்ளது. அதன்படி கேஎல் ராகுல் இடத்தில் அறிமுக வீரர் சர்ஃப்ராஸ் கானிற்கும், ஸ்ரேயாஸ் ஐயர் இடத்தில் ராஜத் பட்டிதாரும், கேஎஸ் பரத்த் இடத்தில் அறிமுக வீரர் துருவ் ஜுரெலும் களமிறக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களைத் தவிர்த்து வாஷிங்டன் சுந்தர், தேவ்தத் படிக்கல் ஆகியோரும் இந்த அணியில் உள்ளனர். 

இந்நிலையில் இன்றைய தினம் பயிற்சி மேற்கொண்ட இந்திய அணியில் அறிமுக வீரர்கள் சர்ஃப்ராஸ் கான் மற்றும் துருவ் ஜுரெல் ஆகியோருக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டதாகவும், அவர்கள் தங்களது முதல் போட்டியில் விளையாட தீவிரமாக தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜுரெல் ஆகியோர் விளையாடுவது உறுதியாகியுள்ளது. 

மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இதுவரை இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (பிப்.15) ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement