
இலங்கை அணிக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் மார்ச் 4ஆம் தேதி முதல் மொஹாலியில் துவங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த தொடரின் 2வது போட்டி வரும் மார்ச் 12ஆம் தேதியன்று பெங்களூருவில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக இளஞ்சிவப்பு நிற பந்தில் விளையாடப்பட உள்ளது.
இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள 18 பேர் கொண்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. நடைபெற்று முடிந்த டி20 தொடரில் இலங்கையை பந்தாடிய இந்தியா 3 – 0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் வெற்றி பெற்றது போலவே இந்த தொடரையும் இந்தியா வெற்றி பெறும் என கணிக்கப்படுகிறது.
முன்னதாக நடைபெற்று முடிந்த இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வு எடுத்து வந்த இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்கள். இதில் குறிப்பாக முதல் போட்டி நடைபெறும் பஞ்சாப் மாநிலம் மொஹாலி மைதானத்தில் விராட் கோலி தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி சாதனை படைக்க உள்ளார்.