
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கான்பூரில் உள்ள கிரீன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஈரப்பதம் காரணமாக தாமதமாக தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியானது மொமினுல் ஹக்கின் அபாரமான சதத்தின் மூலமாக முதல் இன்னிங்ஸில் 233 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மொமினுல் ஹக் 107 ரன்களைச் சேர்த்திருந்தார். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் ரோஹித் சர்மா 23, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 72, விராட் கோலி 47, கேஎல் ராகுல் 68 ரன்களைச் சேர்க்க, 34.4 ஓவர்களில் 285 ரன்களைக் குவித்ததுடன் இன்னிங்ஸையும் டிக்ளர் செய்தது. வங்கதேச அணி தரப்பில் மெஹிதி ஹசன், ஷாகிப் அல் ஹசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதன்பின் 52 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்துள்ள வங்கதேச அணியானது நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 26 ரன்களைச் சேர்த்தது.