
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றதுடன, 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகிக்கிறது.
இதனைத்தொடர்ந்து இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (அக்டோபர் 24) புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்தது. இன்றைய போட்டிக்கான நியூசிலாந்து அணியில் மிட்செல் சான்ட்னர் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம், இந்திய அணியைப் பொறுத்தவரையில் கேஎல் ராகுல், குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் நீக்கப்பட்டு ஷுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டாம் லேதம் மற்றும் டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே நீதானமாக விளையாடிய நிலையில், அணியின் ஸ்கோரும் உயரத்தொடங்கியது. பின்னர் இப்போட்டியில் 2 பவுண்டரிகளுடன் 15 ரன்களைச் சேர்த்திருந்த நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லேதம், ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து கான்வேவுடன் இணைந்த வில் யங்கும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.