
ஓய்வு பெற்ற விரர்களுக்கான லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்தியா கேப்பிட்டல்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு எட்வர்ட்ஸ் - கேப்டன் கவுதம் கம்பீர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் எட்வர்ட்ஸ் 26 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய பீட்டர்செனும் 26 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த கேப்டன் கௌதம் கம்பீர் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் என 51 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து வந்த பாவெல் 28, பென் டங்க் 30, சிப்லி 35, நர்ஸ் 12 ரன்கள் என அணியின் ஸ்கோரை உயர்த்த, 20 ஓவர்கள் முடிவில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்களைக் குவித்தது. குஜராத் ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய எம்ரிட், பாட்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.