
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷான் - ஷுப்மன் கில் இணை களமிறங்கினர். இதில் முதல் ஓவரிலேயே இஷான் கிஷான் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின் கில்லுடன் ஜோடி சேர்ந்த ராகுல் திரிபாதி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.
இதில் 16 பந்துகளை எதிர்கொண்ட ராகுல் திரிபாதி 2 சிக்சர், 5 பவுண்டரி என 35 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் முதல் பந்து முதலே வானவேடிக்கை காட்ட தொடங்கினார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் அரைசதம் கடந்தார்.