முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கையை பந்தாடி இந்தியா அபார வெற்றி!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.

இலங்கை, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
கொழும்புவில் நடைபெற்ற இப்போட்டியானது மழை காரணமாக தாமதமான நிலையில், 39 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் கேப்டன் சமாரி அத்தபத்து 7 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனையனது ஹாசினி பெரேராவும் 30 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய ஹர்ஷிதா மாதவி 14 ரன்களுக்கும், ஹன்சிமா கருணரத்னே 4 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.
Also Read
பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளில் கவிஷா தில்ஹாரி 25 ரன்களுக்கும், நிலாக்ஷி டி சில்வா 10 ரன்களுக்கும், அனுஷ்கா சஞ்சீவனி 22 ரன்களுக்கும், அச்சினி குலசூர்யா 17 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் இலங்கை மகளிர் அணி 38.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய மகளிர் அணி தரப்பில் ஸ்நே ரானா 3 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா, சரணி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய மகளிர் அணிக்கு ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிகா ராவால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். மேற்கொண்டு இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், அதிரடியாக விளையாடி வந்த ஸ்மிருதி மந்தனா 6 பவுண்டரிகளுடன் 43 ரன்களை சேர்த்து விக்கெட்டை இழந்ததுடன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்யும் வாய்ப்பையும் இழந்தார்.
Also Read: LIVE Cricket Score
பின்னர் பிரதிகாவுடன் இணைந்த ஹர்லீன் தியோல் சிறப்பாக விளையாட ஸ்கோர் உயர்ந்தது. இதில் பிரதிகா தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பிரதிகா ராவல் 7 பவுண்டரிகளுடன் 50 ரன்களையும், ஹர்லீன் தியோல் 4 பவுண்டரிகளுடன் 48 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றிடைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 29.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி இத்தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now