
ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. மும்பை டிஒய் பாட்டீல் மைதானத்தில் இந்த தொடர் நடந்துவருகிறது. முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது டி20 போட்டி இன்று நடக்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனையும் கேப்டனுமான அலைசா ஹீலி 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முதல் போட்டியில் அபாரமாக ஆடி 89 ரன்களை குவித்த மற்றொரு தொடக்க வீராங்கனையான பெத் மூனி, இந்த போட்டியில் இந்திய வீராங்கனைகளின் பவுலிங்கை அடித்து நொறுக்கி அரைசதம் அடித்தார்.
3ஆம் வரிசையில் இறங்கிய மெக்ராத்தும் அவருடன் இணைந்து அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார்.பெத் மூனி மற்றும் மெக்ராத் ஆகிய இருவரும் அதிரடியாக பேட்டிங் ஆட, கடைசி வரை இவர்களின் விக்கெட்டை இந்திய அணியால் பிரிக்க முடியவில்லை. பெத் மூனி 54 பந்தில் 13 பவுண்டரிகளுடன் 82 ரன்களையும், மெக்ராத் 51 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 70 ரன்களையும் குவிக்க, 20 ஓவரில் 187 ரன்களை குவித்த ஆஸ்திரேலிய அணி, 188 ரன்கள் என்ற கடின இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது.