
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சொந்த மண்ணில் அசத்தி வரும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா அணி நேற்று நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை தோற்கடித்து தொடர்ச்சியான 6ஆவது வெற்றியை பதிவு செய்தது. லக்னோவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோஹித் சர்மா 87, சூர்யகுமார் யாதவ் 49 ரன்களை எடுத்த உதவியுடன் 230 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
அதை துரத்திய இங்கிலாந்து ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 34.5 ஓவரில் 129 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வியை சந்தித்ததால் இத்தொடரிலிருந்து லீக் சுற்றுடன் வெளியேறுவது 99% உறுதியாகியுள்ளது. அந்தளவுக்கு பந்து வீச்சில் மிரட்டி அரையிறுடதி வாய்ப்பை உறுதி செய்துள்ள இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 4, பும்ரா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
இந்நிலையில் இப்போட்டியில் ஷமியை விட பும்ரா ஸ்விங் செய்து அபாரமாக பந்து வீசியது ஆச்சரியத்தை கொடுத்ததாக பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் பாராட்டியுள்ளார். குறிப்பாக சுல்தான் ஆஃப் ஸ்விங் என்று அனைவராலும் பாராட்டப்படும் அவர் தம்மை விட புதிய பந்தில் அதிக கட்டுப்பாட்டை கொண்டிருக்கும் பும்ரா பாகிஸ்தான் பவுலர்களை விட சிறப்பாக செயல்படுவதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.