
இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி எதிர்த்துப் போராடாமல் ஆஸ்திரேலியா அணியிடம் சரணடைந்து தோற்றுப் பட்டத்தை இழந்தது பெரிய அதிர்ச்சியாகவும் விவாதமாகவும் மாறியிருக்கிறது. இந்திய அணி போட்டிக்குள் வந்து போராடாமல் தோற்றது ஒரு பக்கம் பெரிய பிரச்சனை என்றால், இன்னொரு பக்கம் போட்டிக்குள் வரும் பொழுதே தவறான அணியைக் கொண்டு வந்தது இன்னும் பிரச்சனையை அதிகரிப்பதாக இருக்கிறது.
இது மட்டும் இல்லாமல் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்திய அணியின் திட்டங்கள் படு சுமாராக இருந்தது முன்னாள் கிரிக்கெட் வீரர்களைத் தாண்டி ரசிகர்களையும் மிகவும் கோபமடைய வைத்திருக்கிறது. மேலும் இந்த இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் ஸ்மித் சதம் எடுக்க இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் யாரும் பெரிய ரன்னை எடுக்கவில்லை. தற்பொழுது இதுவும் விவாதமாகி வருகிறது.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கூறும் பொழுது, “ இப்போட்டி ஆன்டி-கிளைமாக்ஸாக முடிந்தது. ஆனால் இன்று விராட் கோலி, ரஹானே, ஜடேஜா மூவரும் களத்தில் இருக்கும் பொழுது நாம் நிறைய எதிர்பார்த்து விட்டோம். 280 ரன்கள் என்பது மிகவும் அதிகம். இந்த நாடுகளில் ஐந்தாவது நாள் கிரிக்கெட் என்பது மிகவும் வித்தியாசமானது. பந்து அசைவதோடு மேலும் கீழும் போய்வரும்.