
இந்திய மகளிர் அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளது.
இதனையடுத்து எதிர்வரும் ஜூன் மாதம் இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜூன் 28ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் ஜூலை 16ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து தொடர்களுக்கான இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுரும், அணியின் துணைகேப்டனாக ஸ்மிருதி மந்தனாவும் தொடர்கின்றனர். மேற்கொண்டு இந்த அணியில் நட்சத்திர வீராங்கனைகள் ரேனுகா சிங் மற்றும் ஸ்ரெயங்கா பாட்டில் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. முன்னதாக இவர்கள் முத்தரப்பு ஒருநாள் தொடரிலும் அணியில் சேர்க்கப்படவில்லை.