
ஐபிஎல் 14ஆவது சீசனின் 2ஆவது சுற்று ஆட்டங்கள் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. இந்தத் தொடரில் பல வீரர்கள் பங்கேற்கவில்லை என்பதால், அதற்கான மாற்று வீரர்களை ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் அறிவித்துள்ளன.
இதில் ஆர்சிபி அணி வெளியிட்ட அறிக்கையில், “ஆஸி.வீரர் ஆடம்ஸம்பாவுக்கு பதிலாக இலங்கை சுழற்பந்துவீச்சாளர் ஹசரங்காவும், வேகப்பந்துவீச்சாளர் டேனியல் சாம்ஸுக்கு பதிலாக துஷ்மந்த் சமீராவும், கேனே ரிச்சர்ட்ஸனுக்கு பதிலாக இங்கிலாந்து இடதுகை வேகப்பந்துவீச்சாளர் கார்டனும், நியூஸி வீரர் பின் ஆலனுக்கு பதிலாக டிம் டேவிட்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில், இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் பட்லருக்கு பதிலாக நியூஸிலாந்து விக்கெட் கீப்பர் கிளென் பிலீப்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரை 25 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள பிலீப்ஸ், ஒரு சதம், 2 அரை சதம் உள்பட 506 ரன்கள் சேர்த்ததையடுத்து சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், ஆன்ட்ரூ டைக்கு பதிலாக, உலக டி20யின் நம்பர் ஒன் பந்துவீச்சாளர் ஷாம்ஸி சேர்க்கப்பட்டுள்ளார்.