
ஐபிஎல் தொடரின் 56ஆவது லீக் போட்டி நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர்கள் ப்ரித்வி ஷா 48 ரன்களும் தவான் 43 ரன்களும் குவித்தனர்.
அதனைத் தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூர் அணியானது ஆரம்பத்தில் படிக்கல் மற்றும் கோலி ஆகியோரை அடுத்தடுத்து இழந்து 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பின்னர் டிவில்லியர்ஸ் 26 ரன்கள் குவித்தாலும் 55 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. அதன் பின்னர் மூன்றாவது வரிசையில் இறங்கிய கே.எஸ்.பரத் மற்றும் 5 ஆவது வீரராக களமிறங்கிய மேக்ஸ்வெல் ஆகியோர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 20 ஓவர்களில் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.
அதிகபட்சமாக பாரத் 78 ரன்களும், மேக்ஸ்வெல் 51 ரன்களும் குவித்தனர். கடைசி ஓவரின் போது வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசி ஒரு பந்தில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. ஆவேஷ் கான் வீசிய அந்த கடைசி பந்தில் சிக்சர் அடித்து பரத் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.