
ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸும் குஜராத் டைட்டன்ஸும் விளௌயாடின. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர் ரிதிமான் சஹா 5 ரன்னிலும், 3ம் வரிசையில் இறங்கிய மேத்யூ வேட் 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்டியாவும் 11 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேற, 9.1 ஓவரில் 53 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது குஜராத் டைட்டன்ஸ் அணி.
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று பொறுப்புடன் பேட்டிங் ஆடிய தொடக்க வீரர் ஷுப்மன் கில் 63 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்றார். டேவிட் மில்லர் அவரது பங்கிற்கு 26 ரன்கள் அடித்தார். ராகுல் டெவாட்டியா 16 பந்தில் 22 ரன்கள் அடித்தார். இன்னிங்ஸின் எந்த சூழலிலும் குஜராத் அணி அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்ய அனுமதிக்காமல் லக்னோ அணி பவுலர்கள் கட்டுக்கோப்புடன் சிறப்பாக பந்துவீசினர்.