
ஐபிஎல் 15ஆவது சீசனில் இன்று நடந்துவரும் எலிமினேட்டரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸும் ஆர்சிபியும் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் தோற்கும் அணி தொடரை விட்டு வெளியேறும். கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்துவரும் இந்த போட்டி 40 நிமிடம் தாமதமாக தொடங்கப்பட்டது.
டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ஃபாஃப் டுப்ளெசிஸ் கோல்டன் டவுட்டாக, மேக்ஸ்வெல் 9 ரன்னிலும், விராட் கோலி 26 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஆர்சிபி அணியின் முக்கியமான 3 வீரர்களும் சோபிக்காதபோதிலும், அதிரடியாக ஆடிய இளம் வீரர் ரஜத் பட்டிதார் பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து ஆடினார். பட்டிதாருடன் இணைந்து தினேஷ் கார்த்திக் பொறுப்புடன் ஆடினார்.
கோலி, ஃபாஃப், மேக்ஸ்வெல் ஆகிய 3 பெரிய வீரர்களும் சொதப்பிய நிலையில், ரஜத் பட்டிதார் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்து ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை அடிக்க உதவினார். அதிரடியாக ஆடிய ரஜத் பட்டிதார், 54 பந்தில் 12 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 112 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார். இந்த சீசன் முழுக்க ஆர்சிபிக்காக இன்னிங்ஸ்களை சிறப்பாக முடித்துக்கொடுத்த தினேஷ் கார்த்திக், இந்த போட்டியிலும் 23 பந்தில் 37 ரன்கள் அடித்து சிறப்பாக முடித்து கொடுத்தார்.